பிரதமர் மன்மோகன் சிங்குடன் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை தமிழர் நிலை குறித்து நேற்று அறிக்கை அளித்தனர்.
அவ்வறிக்கையை அளிக்க சென்ற குழுவில் விடுதலைச்சிறுத்தகைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் தமிழ்விண் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டதாக செய்திவெயிட்டுள்ளது.
தமிழ்விண் செய்தி
சென்னை கவர்னர் மாளிகையில், இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, கவர்னர் பர்னாலாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பின் அவர் கூறுகையில், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மேம்பட வேண்டும் என்ற நோக்கோடு, கவர்னர் பர்னாலாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.
உறவுகள் மேம்பட தொடர்ந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன் என்றார். தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டது குறித்து கேட்டபோது, இது தொடர்பாக இலங்கை அரசிற்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் ஈழத் தமிழர்களின் வாழ்நிலைகளை நேரில் சென்று கள ஆய்வு செய்தது. யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள வதை முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை இக்குழு நேரில் சந்தித்தது. அத்துடன் தமிழினத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்தது. மலையகப் பகுதிகளுக்கும் சென்று இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலைமைகளையும் இக்குழு ஆராய்ந்தது. நிறைவாக, சிங்கள ஆட்சியாளர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து அவர்தம் கருத்துக்களையும் அறிந்தது. 14Š-10Š-2009 அன்று மாலை சென்னை திரும்பிய இக்குழு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் தமது ஆய்வறிக்கையை அளித்தது. தமிழக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் முன்கூட்டியே பரப்பிவிட்ட அவதூறுகளுக்கு மாறாக, அந்த அறிக்கை ஈழத் தமிழர்களின் அவலங்களை உள்ளது உள்ளபடியே உண்மைகளை வெளிப்படுத்தியது. இக்குழு மேற்கொண்ட பயணத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இறுக்கம் நிறைந்த மமதைப் போக்கில் சிறிய அசைவும் தளர்வும் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடகங்களையோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களையோ சர்வதேச அளவிலான மனிதஉரிமை ஆர்வலர்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்காமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இரும்புத் திரையிட்டு சிங்கள ஆட்சியாளர்களால் மூடி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை முதன்முறையாக இக்குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. வதைமுகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே இராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது. மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன. அகில உலகத்தையே வியக்க வைத்த Š அதிர வைத்த வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எம் தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.
ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தமது உறவினர்களைச் சந்திக்கக்கூடப் போக முடியாதபடி முள்வேலிக் கம்பித் தடுப்புகளும் இராணுவத்தின் கெடுபிடிகளும் வாய் திறக்க முடியாத வகையில் அவர்களை வாட்டி வதைக்கிறது. மெலிந்த நலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரைதாரையாய் நீர் கொட்டுவதைக் காண முடிகிறது. இரு கைகளையும் கூப்பிக் குனிந்து கும்பிடு போட்டு, ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா!'' என்று கண்ணீரைக் கொட்டியபடி சிலர் கதறி அழுதனர். இரண்டு பேர் மட்டுமே படுத்து எழக்கூடிய கூடாரங்களில் எட்டுப் பேர், பத்துப் பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டைச் சொற்களால் விவரிக்க முடியாது. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத பெரும் கொடுமையாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு ஈழத்தில் நடக்கும் சிங்கள இராணுவ ஆட்சியின் அரச வன்கொடுமைகளை உலகரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு சிங்கள அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ. 500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வதைமுகாமில் சிக்கி அவதிப்படுவோரை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்பதும், அவர்தம் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்பதும் இன்றியமையாத ஒன்று என்றாலும், தவிர்க்க முடியாத உடனடித் தேவைகள்தான் என்றாலும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அத்தகைய இனவெறியாளர்களை தண்டிக்க வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.
அந்த வகையில் நெஞ்சிலே ஈரமில்லாத ஈவிரக்கமேயில்லாத சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, இராஜபக்சே சகோதரர்களை சர்வதேசப் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும் சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனவும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 22-10--2009 அன்று சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தத் தமிழர்களும் மனிதநேய ஆர்வலர்களும் மேற்சொன்ன இரு கோரிக்கைகளை மையப்படுத்தி சர்வதேசச் சமூகத்தை தொடர்ந்து வற்புறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல் .திருமாவளவன்
.
புதினம் இணையத்தளம், அதன் உரிமையாளர்களால் முடக்கப்பட்டதா இல்லை, அதன் வலையத்தளத்தில் எவரேனும் ஊடுருவி இவ்வாறு செய்திருக்கிறார்களா என இதுவரை சரியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை வழங்குமாறும் மீண்டும் இந்திய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு உரிய முறையில் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வாறன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதனை செயலாளர் நாயகமும், தாமும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்திய தேசிய மட்ட விசாரணைகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைகள் நடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் இலங்கைக்கு விஜயம் செய்வதனை அந்நாட்டு அரசாங்கம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வீர்களா? என ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி இலங்கையில் இடம்பெயர்ந்த சிறுவர்களது நிலைமை உட்பட பல விடயங்கள் குறித்து அவதானிப்பதற்காக இராணுவ மேஜர் ஜெனரல் பற்றிக் கெம்மேட் என்பவரை தமது பிரதிநிதியாக அடுத்த மாதம் அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நாட்டின் வட பகுதியில் இன்னமும் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த சிறுவர்களின் கதி குறித்து விசேட பிரதிநிதி குமாரசுவாமி கடந்த மாதம் குரல் எழுப்பியிருந்தார்.
இதற்கிடையில் மேஜர் ஜெனரல் பற்றிக் கெம்மேட்டை நவம்பர் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அனுப்பப் போவதாக இன்னர் சிற்றி பிறெஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கைப் பிரதம மந்திரியை ராதிகா குமாரசுவாமி சந்தித்து பேசியது பற்றி இன்னர் சிற்றி பிறெஸ் அவரிடம் கேட்ட போது, தாம் நட்புறவு ரீதியிலேயே இலங்கைப் பிரதமரை சந்தித்ததாகக் கூறினார்.
ஆனால், இலங்கை வெளிவிவகார அமைச்சரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் தாம் உத்தியோகபூர்வமாக சந்தித்ததாகவும் ராதிகா குமாரசுவாமி தெரிவித்தார்.
அவர்களுடன் தாம் பேசிய விடயங்களில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் உரிமைகள் பேணப்படுவது பற்றியும் கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.
வன்னி மெனிக் பாம் முகாமிலும் ஏனைய முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த சிறுவர்களின் நிலைமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அவர் சமர்ப்பித்த அலுவலக அறிக்கையில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் உரிமைகளும் உத்தரவாதங்களும் என்ற இணைப்பு 1க்கு அமைவானது என்று கருதுகிறீர்களா என இன்னர் சிற்றி பிறெஸ் அவரிடம் வினவியது.
அதற்குப் பதிலளித்த ராதிகா குமாரசுவாமி, முகாம்களில் நடமாடும் சுதந்திரத்தையும் ஏனைய விடயங்களையும் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன என்று கூறினார். இது சம்பந்தமான இலங்கையின் பிரதிபலிப்பு மிகக் கடூரமானது என்றும் அவர் கூறியதாக இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை சென்ற தமிழக எம்பிக்கள் குழு சென்னை திரும்பியது. முதலமைச்சர் கருணாநிதி சென்னை விமானநிலையத்தில் அவர்களை வரவேற்றார்.
இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்பிக்களூடன் கலந்தாய்வு செய்த பிறகு முதல்வர் கருணாநிதி, ‘’இலங்கையில் தமிழர்கள் நாளை முதல் சொந்த இடங்களில் குடியேறுவார்கள். முதற்கட்டமாக 58ஆயிரம் பேர் 15 நாட்களில் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்’’என்று தெரிவித்தார்.
இலங்கை முகாம்களில் தமிழர்களின் நிலை என்ன என்பதை நேரில் கண்டறியவதற்காக திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் 10 எம்.பி.க்களை கொண்ட குழு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு சென்றது.
முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களை தமிழக குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இதனையடுத்து கடந்த 11ந் தேதி யாழ்ப்பாணம் சென்று அங்கு வசிக்கும் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அன்று மாலை வவுனியாவில் உள்ள மாணிக்பார்ம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். 5 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது.
பின்னர் எம்.பி.க்கள் தனித்தனியாக சென்று தமிழ் அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இதை அடுத்து திங்கட்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பின் பேரில் நுவரலியா மலையக பகுதிகளுக்கு சென்று அங்கு வசிக்கும் தமிழக வம்சாவளி தொழிலாளர்களை கண்டு பேசினார்கள். அங்கிருந்து ஹட்டனுக்கு தமிழக எம்.பி.க்கள் குழு சென்றபோது ஏராளமான மக்கள் திரண்டு அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர்.
திங்கட்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சேயை தமிழக குழுவினர் சந்திப்பதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அவர்கள் ராஜபக்சேயை சந்தித்து பேசினார்கள்.
முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினார்கள்.
அவர்களது கோரிக்கைகளை கேட்ட ராஜபக்சே, தமிழர்கள் வசித்த பகுதிகளில் விடுதலைப்புலிகள் வைத்துள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் தமிழர்கள் அப்பகுதிகளில் மறு குடியமர்த்தம் செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
தமிழக எம்.பி.க்கள் இலங்கைக்கு வந்து முகாம்களின் நிலையை கண்டறிந்ததை ராஜபக்சே பாராட்டினார். இந்த சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானும் உடனிருந்தார்.
பின்னர் எம்.பி.க்கள் குழு இலங்கை பிரதமரை சந்தித்து பேசியது. இன்று தமிழக எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமா ஆகியோரை சந்தித்து, முகாம்களில் தாங்கள் கண்டறிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
கடந்த 4 நாட்களாக இலங்கையின் பல்வேறு முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்திய தமிழக எம்.பி.க்கள் குழுவினர், தங்கள் 5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினர்.
இவர்களை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற முதல்வர் கருணாநிதி, இலங்கையில் நாளை முதல் சொந்த இடங்களில் குடியேறுவார்கள் என்று தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப ஓரளவு நெருக்கமாக அமைந்துள்ளன. அங்கு பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. அங்கு வாழ்கின்றவர்கள் தங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்களே தவிர, வேறெதனையும் கேட்கவில்லை என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் குழுவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இலங்கையில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளான தமிழர்கள், பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவிப்பதாக பல்வேறு தகவல்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டன. அந்த தகவல்கள் உண்மையானவையா? என்பதனை நேரடியாக கண்டறிவதற்கே வருகைதந்தோம் என்றும் அவர் சொன்னார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்களை அவர்கள் மலையகத்திற்கு விஜயம் செய்கின்ற வேளையில் கேசரி நாளிதழுக்காக நேர்காணல் செய்வதற்கு முயற்சித்தோம், நெருக்கமான நிகழ்ச்சி நிரல் என்பதனால் ஒவ்வொரு வைபவத்திலும் ஐந்து, பத்து நிமிடங்களை மட்டுமே செலவழித்தனர். எனினும் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான விஜயத்தின் போது காலை உணவையும் உட்கொண்டு இரண்டொரு மணித்தியாலம் அங்கிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
இவ்வாறான தொரு நிலையிலேயே காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பனை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர் குறுகிய நேரத்திற்குள் கேசரி நாளிதழுக்காக வழங்கிய செவ்வியின் விபரத்தை கேள்வி பதிலாக தருகின்றோம்.
இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?
நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.
முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?
சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.
நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?
மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.
உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.
தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?
தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.
எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?
அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?
நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?
பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?
அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?
பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.
நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?
நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?
பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?
பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.
மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .
மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார்.
.
நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எம்மிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
எனினும் இந்த தகவல்களை வெளியிட்டால், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிப்படையும் என தெரிவித்து, கருத்து வெளியிட தமது குழுவால் தடைவிதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கருத்தில் கொண்டு, மக்களின் உண்மை நிலைகளை வெளிப்படுத்தாதிருப்பது தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கான்பெரா: இலங்கையிலிருந்து பெருமளவில் ஈழத் தமிழர்கள் புகலிடம் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வருவதால், அந்த நாடு கவலை அடைந்துள்ளது. இந்தோனேசியா மூலமாக இவர்கள் வருவதால் இதைத் தடுக்க என்ன வழி என்று கேட்டு இந்தோனேசிய அதிபருடன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் ஆலோசனை நடத்தியுள்ளார.
இலங்கையிலிருந்து பெருமளவிலான தமிழர்கள் முன்பு தமிழகத்திற்குத்தான் படகுகள் மூலம் அகதிகளாக வருவார்கள். ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவை நோக்கி அவர்கள் பெருமளவில் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்தோனேசியா சென்று அங்கிருந்து உயிரைப் பணயம் வைத்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியா செல்கின்றனர். அவர்கள் தவிர ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் அகதிகளாக வருகின்றனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு, கிறிஸ்துமஸ் தீவு என்ற இடத்தில் இவர்களை தங்க வைத்து வருகிறது. அந்தத் தீவில் உள்ள புகலிடம் தேடி வருவோருக்கான முகாமில் இதுவரை 1200 பேர் சேர்ந்து விட்டனர். இனியும் யாரையும் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் 260 பேருடன் (பெரும்பாலானோர் தமிழர்கள்) ஒரு படகு இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கிக் கிளம்பியது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய அதிபரைத் தொடர்பு கொண்டு அந்தப் படகைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அப்படகு நடுக் கடலில் மடக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது அந்தப் படகில் இருந்தவர்கள் மேற்கு ஜாவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரூட் கூறுகையில், அதிபர் சுசிலோ பம்பாங் யுத்யோனாவுடன் சனிக்கிழமை போனில் பேசினேன். அதிக அளவில் நடந்து வரும் இந்த மக்கள் கடத்தல் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன் என்றார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர், பொருளாதார மந்த நிலை காரணமாக பெருமளவிலானோர் ஆஸ்திரேலியாவை நாடி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்படி வருகிறவர்களை ஆஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புவதில்லை. மாறாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பி விடுகிறது. ஆனால் இதை ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. கெவின் ரூட் வந்தது முதலே ஆஸ்திரேலியாவின் குடியேற்ற கொள்கையில் பெரும் குழப்பமாகி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு முன்பு இருந்த ஜான் ஹோவர்ட் அரசு, அகதிகளாக வருவோர் பிடிபட்டால் அவர்களை நெளரு அல்து பாபுவா நியூ கினியாவுக்கு கொண்டு சென்று அங்குள்ள சிறப்பு மையங்களில் (சிறைகள்தான்) வருடக் கணக்கில் அடைத்து வைத்து விடுவார்கள். ஆனால் கெவின் ரூட் பிரதமராக வந்த பின்னர் இந்த நடைமுறையை ரத்து செய்து விட்டார்.
கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பபடுவோரை முறையாக விசாரித்து உரிய காரணங்களுடன் வருவோருக்கு ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களுக்கமைய, மே 18ம் திகதி அதிகாலை 58வது படைப்பிரிவின் அந்நாள் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் சிவேந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, போர்க் கைதிகளை வைத்துக் கொள்வது அரசாங்கத்திற்கு தேவையற்ற விடயமெனவும் வெள்ளைக் கொடியுடன் அல்லது கொடியின்றி வரும் எந்தவொரு தரப்பினரையும் தராதரம் பாராது சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் 18ம் திகதி பிற்பகல் பரந்தன் ‐ முல்லைத்தீவு வழியாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலும் சர்வதேச அமைப்பொன்றும், வெளிநாட்டு தூதரகமொன்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித கோஹன, ஜனாதிபதி சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவித்த பின்னரே புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றுள்ளனர்.
இதேவேளை யுத்த நடவடிக்கைகளுக்குரிய ஆயுதங்கள் குறித்து ஆராயும் நோக்கில் சீனா சென்றிருந்த அந்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 18ம் திகதி மதியமே நாடு திரும்பியிருந்ததாகவும் இராணுவத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
தமிழக முதல்வரின் மகளும் எம்.பி.யுமான கனிமொழியை அணுகியபோது அவர் “”நோ கொமன்ட்ஸ்” என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இலங்கை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கட தமிழகத்தில் அதிக குரல் கொடுத்தவரும் விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவருமான திருமாவளவனைச் சந்தித்தப்போது அவரும் செவ்வியளிக்க மறுத்ததுடன், ஓரிரு வார்த்தைகளை கூறினால் அவர் கூறுகையில்,
முகாம்களில் இருக்கும் அகதிகள் தங்களை உடனடியாக மீளவும் தங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம். இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய அரசாங்கமுமே தீர்மானிக்கும் என்றார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் முகாம்களிலுள்ள மக்கள், தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் விடுத்த கோரிக்கை என்ன? அதனை இந்தக் குழு விரைவாக நிறைவேற்றிக் கொடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று கேட்டபோது, முகாம்களை அவதானித்தோம். நேரில் கண்டதை மிக விரைவில் அறிக்கையிட்டு தமிழக அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவோம்.
முகாம்களில் வாழ்கின்ற மக்கள் நிவாரணப் பொருட்களைக் கேட்க வில்லை. தமது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழ்வதற்கே விரும்புகின்றனர் என்றார். மேலும் அவரிடம் விபரம் அறிய முயன்றபோது, மேலதிக விபரங்களை தொலைபேசியூடாக தெரிவிப்பதாக கூறினார்.
.
இதேவேளை கைதானவர்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருவதாக இந்தோனேசிய கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரணைகளின் பின்னர், பெரும்பாலும் நளைய தினம் இந்தோனேசிய இடம்பெயர்ந்தோர் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தனித்தனியே முதலில் சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து மலேசியாவிற்கு சென்று, பின்னர் ஆட்கடத்தல் முகவர்களால் ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் ஏற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
அவர்கள் நீண்ட நாட்கள் கடல்பயணத்தில் இருந்ததால், உணவு இன்றி அவஸ்த்தைப்பட்டதாகவும், அவர்கள் மீட்கப்படும் போது, அவர்களுள் பலர் போசாக்கின்மையாக காணப்பட்டதாகவும், பலருக்கு தோல் சம்பந்தமான நோய்கள் காணப்பட்டதாகவும் இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மீண்டுமொரு ஊழல் வலையில் மாட்டியுள்ளது. கேள்விப் பத்திர நடைமுறைகளையெல்லாம் மீறி தனது உறவினருக்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை வழங்கியுள்ளது.
கொரியாவைச் சேர்ந்த சம்சுங் கோப்ரேசனின் இலங்கைப் பிரதிநிதி முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஸவின் உறவினர் என்பதால் கேள்விப் பத்திர ஒப்பந்த நடைமுறைகளை மீறி இவ்வொப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் எண்ணப்படி இலங்கையின் இலத்திரனியல் அரசாங்க வலைத் தொடர்பை வலுப்படுத்துவதற்காக பல மில்லியன் தொடர்பான இவ்வொப்பந்தம் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டிருக்கிறது.
எல்லா அரச நிறுவனங்களையும் ஒரே கணனி வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதற்காக 15 மில்லியன் டொலர் பெறுமதியான இவ்வொப்பந்தம் 2005 ஆம் ஆண்டு ஜுலை 6ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. கொரிய நிறுவனமொன்றுக்கு இத்திட்டம் வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் இந்நிதி கொரியாவிலுள்ள இறக்குமதி ஏற்றுமதி வங்கியால் வழங்கப்பட்டிருந்தது.
கொரியாவைச் சேர்ந்த சம்சுங் நிறுவனமும் கொரிய ரெலிகொமும் இதற்கான கேள்விப்பத்திரங்களைச் சமர்ப்பித்திருந்தன. கொரிய ரெலிகொமை விட சம்சுங் நிறுவனம் அதிக விலைகோரலைக் குறிப்பிட்டிருந்தும் கூட சம்சுங் நிறுவனத்திற்கே அவ்வொப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
2006 ஓகஸ்டில் 14.8 மில்லியன் டொலர்களுக்கான இவ்வொப்பந்தம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குக் கீழ் வரும் ஐ.சி.ரி.ஏ எனும் தகவற் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், சம்சுங்கின் இலங்கை ஏஜன்டான அஸ்ஸற் நெற்வேர்க்குக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.தகவல் தொடர்பாடற் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அஸ்ஸற் சார்பில் டில்சான் விக்கிரமசிங்கவும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்த டில்சான் விக்கிரமசிங்க முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஸவின் மருமகனாவார்.
ஓப்பந்தம் முறைகேடாக வழங்கப்பட்டது மட்டுமன்றி ஒப்பந்த விதிகள் கூட முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஒப்பந்தத்தில் உள்ளதற்கு மாறாக மிக மலிவான தரம் குறைந்த உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அப்பொருட்களை இலங்கையில் அதனிலும் பார்க்கக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கிறது.
உள்நாட்டமைச்சின் கீழ் வரும் இரண்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் இவ்வுபகரணங்கள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. உதாரணமாக 123 சென்றல் யுபிஎஸ்கள் தலா ஒவ்வொன்றும் 1598.29 டொலர் பெறுமதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் உள்நாட்டில் இதனைவிடத் தரம் வாய்ந்த யுபிஎஸ்ஸை 800 டொலருக்குக் கொள்வனவு செய்ய முடியும்.
அதேபோல் 3225 செல்ரோன் கொம்பியூட்டர்கள் தலா 1394.19 டொலர்ப்படி கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதே பொருளை இலங்கையில் 350 தொடக்கம் 400 டொலருக்குள் வாங்க முடியும்.
1175.19 டொலரின்படி 325 கார்ட் டிஸ்க் வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் சராசரியாக இதனை இலங்கையில் 350 டொலருக்கு வாங்கலாம். இதேபோல் 325 எச்.பி ஸ்கானர்( மொடல் ‐ 8200) 519 டொலர்ப்படி வாங்கப்பட்டிருக்கிறது. அது இலங்கையில் 254 டொலர் ஆகும்.
யுபிஎஸ், ரவுட்டர், எக்ஸ்.பி, கொம்பியூட்டர் போன்றவை ஓப்பந்தத்தில் குறிப்பிட்ட தரத்தின்படி அமைந்திருக்கவில்லை. இவை ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதாக உள்ளன.
இவை தொடர்பான எவ்விதக் கணக்காய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. முதற் பெண்மணியின் மருமகன் என்ற காரணத்தினால் இவை தொடர்பாக வருகின்ற குற்றச்சாட்டுக்கள் கூட கவனத்தில் கொள்ளப்படாது புறக்கணிக்கப்படுகின்றன.
தகவல்: சண்டே லீடர்
தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளருக்குச் சொந்தமான வானொலி 400 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது?
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூனுகல்லவிற்குச் சொந்தமான சத் எவ்.எம். வானொலியை பாகிஸ்தானியர் ஒருவருக்கு 400 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது குறித்து உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆணைக்குழுவின் அனுமதியின்றி வானொலிக்கான அனுமதிப் பத்திரத்தை வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய முடியாது. லக்ஸ்மன் ஹூனுகல்லவிற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரமானது செட் நெட் பிரைவட் லிமிட்டட் என்ற நிறுவனத்தினால் சத் எவ்.எம். வானொலி கடந்த காலங்களில் இயங்கிவந்தது.

இந்த நிலையில் லத் எவ்.எம். வானொலிக்கான அனுமதிப்பத்திரத்தைக் கொள்வனவு செய்துள்ள பாகிஸ்தானியர் தெற்காசியப் பிராந்தியத்தில் பிரபல வர்த்தகர் எனவும் ஆசிய பிராந்தியத்தில் அவரை எக் போஸ் என்ற புனைப் பெயரிலேயே அழைப்பதாகவும் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், இந்த நபர் அல் கைதா அமைப்புடன் சம்பந்தப்பட்டிருப்பதாக அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. குறித்த பாகிஸ்தானியர் இலங்கையில் வசித்துவருவதாகக் கூறிப்படுகிறது.
இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் எவ்வித தேவைகளையும் மேற்கொள்ளாது மக்களின் பணத்தை கொள்ளையிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈ‐ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதியின் புதையலாக மாறியுள்ளது?
ஈ‐ஸ்ரீலங்கா திட்டம் ஜனாதிபதியின் உறவினர்களின் புகலிடமாக மாறியுள்ளதுடன், ராஜபக்ஷகளின் புதையலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஈ‐ஸ்ரீலங்கா திட்டம், சீ….ஸ்ரீலங்காத் திட்டமாக மாறியுள்ளதாக ஊழல்தொடர்பான தகவல்களை வெளியிட்டுவரும் இணையத்தளம் ஒன்று ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இந்த இணையத்தளம் ஈ‐ஸ்ரீலங்கா திட்டத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகளை வெளியிட்டிருந்தது. கணனிகளைக் கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திரக் கோரல், கணனிகளைத் தெரிவுசெய்வது போன்றவற்றிலும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தன.

ஸ்ரீலங்கா திட்டமானது அரச அலுவலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்தும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அரச அலுவலகங்கள் தொடர்ந்தும் முன்னைய பாணியிலேயே தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இலங்கை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், தொழில் நீதிமன்றம் உள்ளிட்ட 350 நிறுவனங்கள் இதுவரை கணனிமயப்படுத்தப்படவில்லை.
சில நீதிமன்றங்களில் இரண்டு அல்லது மூன்று கணனிகளே உள்ளன. போதுமான கணனிகள் இருக்குமாயின் நீதிமன்றப் பணிகளை தற்போதுள்ளதைவிட விரைவு படுத்த முடியும். இதனைத்தவிர ஆட்பதிவுத் திணைக்களத்திலும் கையால் எழுதியே ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.இதன்காரணமாகவே அடையாள அட்டையொன்றை விநியோகிக்க ஆறு மாதகாலத்திற்கு மேல் செல்கிறது.
இந்தத் திணைக்களத்தின் பணிகளை கணனிமயப்படுத்தியிருந்தால், அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியிருக்கலாம். இவ்வாறான பணிகளைச் செய்ய வேண்டிய ஈ‐ஸ்ரீலங்கா திட்டத்தினர் மக்களின் பணத்தை மோசடி செய்யும் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட்டு வருவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த தொல்.திருமாவளவன், யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து மக்களை சந்திப்பதற்கு இலங்கை இராணுவத்தினரிடம் அனுமதி கோரியிருந்தார்.
எனினும் பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து அவரது கோரிக்கையை இலங்கை இராணுவத்தினர் நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
October 12, 2009
தென் மாகாண சபைத் தேர்தல் முடிவு அரசாங்கத்திற்கு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 90 வீதமான வாக்குகளைப் பெற்று சரித்திரம் படைப்போம் எனக் கூறிய அரசாங்கத்தின் இந்த சரிவானது எதிர்கால தோல்விக்கான அறிகுறியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி வந்துள்ளதால் 1300 மில்லியன் ரூபா வீணடிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் தென் மாகாண சபைத் தேர்தலில் பாரிய அளவு அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து கூறுகையில், ஜனாதிபதியின் குடும்ப அரசியலுக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான அரசின் செயற்பாட்டிற்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். தென் மாகாண மக்களின் இந்தத் தீர்ப்பு ஏனைய மாகாண மக்களுக்கும் தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ வெற்றியையும் தென் மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டத் திட்டங்களையும் முன்வைத்தே அரசாங்கம் இந்தத் தேர்தலில் களமிறங்கியது. இதன் மூலம் பாரிய வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், எதிர்பார்த்தளவு வாக்குகளை அரசாங்கத்தால் பெற முடியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி பிறந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விட இத்தேர்தலில் குறைந்த வாக்குகளே பெறப்பட்டுள்ளன.
ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தின் முழுப் பலத்தையும் பிரயோகித்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வந்தனர். இதன்போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட அமைச்சர்கள் பலரும் அரசாங்கம் 90 வீதமான வாக்குகளைப் பெற்று பாரிய வெற்றியீட்டும் என தொடர்ச்சியாக கூறி வந்தனர். ஆனால், அவர்கள் கூறிய இலக்கை நெருங்கக் கூட முடியாமல் போயுள்ளது.
இந்த மாகாணத்தில் பாரிய அளவு தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் தினத்தன்று கூட கட்டவுட், பெனர், போஸ்டர் என தேர்தல் விளம்பரங்கள் நீக்கப்படாமல் இருந்தன. 7 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன என அறிவிக்கப்பட்ட போதிலும் 9 ஆம் திகதி வரை அரசாங்க தரப்பினர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்வாறு சட்டத்தை மதிக்காது செயல்படும் இவர்களால் மக்களை சட்டத்தை மதித்து செயல்படுமாறு எப்படிக் கூற முடியும்? மக்கள் இப்போது தெளிவடைந்துள்ளார்கள். தொடர்ந்தும் இவர்களால் மக்களை ஏமாற்ற முடியாது. இவர்களின் ஏமாற்று வித்தைக்கான பரிசினை மக்கள் வழங்குவார்கள். அதற்கான ஆரம்பமே தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள். ஜனாதிபதிக்கு நன்றி செலுத்தும் முகமாக தென் மாகாண மக்கள் 90 வீதமான வாக்குகளை வழங்கி அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேட்டிருந்தார். ஆனால், மக்கள் இதனை நிராகரித்துள்ளார்கள். ஜனாதிபதி இந்த மாகாணத்தில் தங்கியிருந்து பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அது மாத்திரமல்லாமல் அந்தக் காலங்களில் அமைச்சரவை ஒன்றுகூடலையும் தென் மாகாணத்தில் கூட்டியிருந்தார். இதன் மூலம் வீண் செலவுகளை செய்திருக்கின்றார். இந்த ஒன்றுகூடல்களுக்கான தண்ணீர் போத்தல்கள் கூட வானூர்தியின் மூலமே கொண்டு செல்லப்பட்டன. துறைமுகத்தில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதாக தென் மாகாணத்தில் இலட்சக்கணக்கான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவ்வாறான போலி உறுதி மொழிகள் மூலம் பாரிய வெற்றி பெறலாம் என கனவு கண்டது. இதனை இனங்கண்டு கொண்ட மக்கள் அதற்கான தக்க பதிலை வழங்கியுள்ளார்கள். அரசாங்கம் கூறுவதைப் போல மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. எனவே அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கைத் தமிழ் மக்கள் சம உரிமை உடையவர்களாக இங்கு வாழ வேண்டும் என்பதே எமது விருப்பம். நீங்கள் எங்களை இதமான உணர்வோடு வரவேற்றீர்கள். உங்களுக்காக உணர்வோடு பேசக் கூடிய ஒரு குழுவாக நாம் இங்கு வருகை தந்திருக்கிறோம்.
நீங்கள் இங்கு வைத்துள்ள கோரிக்கைகளையும் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் நாம் உறுதியாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு இருக்கக் கூடிய மக்களுக்கு ஒரு நாட்டுக் குடிமக்களாக அவர்களுக்கு வந்து சேர வேண்டிய நியாயமான உரிமைகளையும் நீதிகளையும் குடியுரிமைக்கான உரிமைகளையும் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்து வருகின்றது.
இங்கு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும். இங்கு ஒரு ஜனநாயக சூழல் திரும்ப வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். அதுவே இந்தியாவின் விருப்பமாகவும் உலகத்திலே இருக்கின்ற ஏனைய தலைவர்களின் விருப்பமாகவும் இருக்கும்.
சுமுக நிலை இலங்கையில் மீண்டும் திரும்ப வேண்டும். தமிழர்கள் சம உரிமைகளுடன் சிறந்து வாழ வேண்டும் என்பதற்காக எங்களால் என்னென்ன முயற்சிகளை செய்ய முடியுமோ நிச்சயமாக ஒவ்வொரு கட்சி ரீதியாகவும் சரி இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் நாங்கள் செய்வோம் என்பதை உங்களிடத்தில் உறுதியாகக் கூறுகிறோம்.
உங்களின் எண்ணங்களை உறுதியாக நிச்சயமாக இந்திய அரசுக்கு எடுத்துக் கூறுவோம் என்றார்.
-
யாழ்.வலம்புரி நாளிதழ் தலையங்கம்
இது தொடர்பில் வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
தமிழக எம்.பிக்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்தது. வழக்கப்படி மங்கள வாத்தியம், பொன்னாடை, மலர்மாலை, வரவேற்ப்பு பாடல், நினைவுப் பரிசு என தடல் புடலான ஏற்பாடு.
இவை எதுவுமே வேண்டாம்.தமிழர் பிரச்சினையை கூறுங்கள் என அவர்கள் தெரிவித்த போதிலும், அதனை எம்மவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இருந்தும் தமிழகத்தில் இருந்து வந்த எம்.பிக்கள் குழு அதனை நிராகரித்து விட்டன. அதுவொன்றே தமிழகக் குழுவிடம் விருப்பிற்குரிய செயலாக இருந்தது. இதற்கு மேலாக அந்தக் குழுவிடம் எதனையும் எதிர்பார்க்க முடியவில்லை.
எங்கள் கஷ்டகாலம் தமிழக குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை ஏற்றிருந்தார். அட! இராமா! வந்த மனுஷன் யாழ்.பொது நுலகத்தில் இருந்து, வந்தவர்களை அதட்டினார்.
நேரமில்லை என்று கூறி கருத்துக்களை தட்டிவிட்டார்.ஒரு சிலர் கூறிய கருத்துக்களையும் அவர் செவிமடுக்கவில்லை.
வந்த குழு தமிழரின் அவலத்தை கேட்கும் என்றால் சுடுமூஞ்சி டி.ஆர்.பாலு எதற்குமே இடம்தரவில்லை.
இராவணன் காலத்தில் இலங்கைக்கு அனுமன் வந்ததுண்டு. ஆனால் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழக எம்.பிக்கள் குழுவுக்கு சனீஸ்வரன் தலைமை ஏற்று வந்ததென்பதை யாழ் பொதுநூலகத்திற்கு சென்ற பின்பே தெரிய வந்தது.
சனீஸ்வரனின் பார்வை கனிமொழியின் வாயை அடைத்தது. தொல் திருமாவளவனை பேசவே விடாமல் தடுத்தது .
அப்படியானால் வந்தது சனீஸ்வரன் என்பதை புரிந்து கொள்வதுடன் டி.ஆர்.பாலு ஒரு தமிழ் உணர்வற்றவர் என்பதும் நிருபணமாகியுள்ளது.
அவரின் தலைமையுரை -யாழ் மக்களுடன் அவர் கலந்துரையாடிய நெறிமுறை ,யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகத்திற்கு அவர் கொடுத்த கெளரவம் எதுவுமே பொருத்தமானதல்ல .
இது அவரின் சிறுபான்மைத்தனத்தையே சுட்டிநிற்கின்றது.
எதுவாயினும் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் எங்கள் அவல நிலையை எடுத்துரைப்பர் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது.




