முகாம்களில் நடமாடும் சுதந்திரம் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன -ராதிகா குமாரசுவாமி

Posted PM 2:39 by S R E E in லேபிள்கள்: ,
முகாம்களில் நடமாடும் சுதந்திரம் ‐ ஏனைய விடயங்களைப் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன ‐ ராதிகா குமாரசுவாமி

சிறுவர்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி இலங்கையில் இடம்பெயர்ந்த சிறுவர்களது நிலைமை உட்பட பல விடயங்கள் குறித்து அவதானிப்பதற்காக இராணுவ மேஜர் ஜெனரல் பற்றிக் கெம்மேட் என்பவரை தமது பிரதிநிதியாக அடுத்த மாதம் அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நாட்டின் வட பகுதியில் இன்னமும் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த சிறுவர்களின் கதி குறித்து விசேட பிரதிநிதி குமாரசுவாமி கடந்த மாதம் குரல் எழுப்பியிருந்தார்.
இதற்கிடையில் மேஜர் ஜெனரல் பற்றிக் கெம்மேட்டை நவம்பர் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அனுப்பப் போவதாக இன்னர் சிற்றி பிறெஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கைப் பிரதம மந்திரியை ராதிகா குமாரசுவாமி சந்தித்து பேசியது பற்றி இன்னர் சிற்றி பிறெஸ் அவரிடம் கேட்ட போது, தாம் நட்புறவு ரீதியிலேயே இலங்கைப் பிரதமரை சந்தித்ததாகக் கூறினார்.
ஆனால், இலங்கை வெளிவிவகார அமைச்சரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் தாம் உத்தியோகபூர்வமாக சந்தித்ததாகவும் ராதிகா குமாரசுவாமி தெரிவித்தார்.

அவர்களுடன் தாம் பேசிய விடயங்களில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் உரிமைகள் பேணப்படுவது பற்றியும் கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.
வன்னி மெனிக் பாம் முகாமிலும் ஏனைய முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த சிறுவர்களின் நிலைமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அவர் சமர்ப்பித்த அலுவலக அறிக்கையில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் உரிமைகளும் உத்தரவாதங்களும் என்ற இணைப்பு 1க்கு அமைவானது என்று கருதுகிறீர்களா என இன்னர் சிற்றி பிறெஸ் அவரிடம் வினவியது.

அதற்குப் பதிலளித்த ராதிகா குமாரசுவாமி, முகாம்களில் நடமாடும் சுதந்திரத்தையும் ஏனைய விடயங்களையும் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன என்று கூறினார். இது சம்பந்தமான இலங்கையின் பிரதிபலிப்பு மிகக் கடூரமானது என்றும் அவர் கூறியதாக இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவித்துள்ளது.


0 comment(s) to... “முகாம்களில் நடமாடும் சுதந்திரம் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன -ராதிகா குமாரசுவாமி”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails