மனித உரிமை மீறல் புகார்: இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு; ஐ.நா. விசாரணை இல்லை

Posted PM 7:55 by S R E E in லேபிள்கள்: ,

ஜெனீவா, மே. 28-

இலங்கையில் விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது.

இதுபற்றி ஐ.நா. சபையில் மனித உரிமை குழு விசாரணை நடத்தவேண்டும் என்று மனித உரிமை சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகள் முயற்சியால் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த 2 நாட்களாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடந்தது.

தொடக்கத்தில் இருந்தே தீர்மானத்துக்கு எதிராக அதே நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நடந்து கொண்டது. இதேபோல சீனா, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளும் இலங்கையை ஆதரித்தன.

நேற்று இரவு ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 17 நாடுகளும், எதிர்த்து இந்தியா உள்பட 22 நாடுகளும் ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.

எனவே மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா.சபை மனித உரிமை குழு விசாரணை நடத்த தேவை இல்லை.

இந்த தீர்மானம் வந்ததுமே இலங்கை பல்வேறு நாடுகளையும் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டன. அதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. மனித உரிமை குழுவில் உறுப்பினராக உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, ரஷியா, கியூபா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 22 நாடுகள் இலங்கையை ஆதரித்து உள்ளன.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் இலங்கைக்கு எதிராக ஓட்டு போட்டன. 8 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு போடக்கூடாது என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை புறக்கணித்து இந்தியா இலங்கையை ஆதரித்து உள்ளது.

இதே விவாதத்தின்போது இலங்கை தனது நாட்டு மறு சீரமைப்புக்கு சர்வதேச நாடுகளின் நிதி உதவியை கோரும் தீர்மானத்தையும் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் ஓட்டு போட்டன. ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்து ஓட்டு போட்டன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. எனவே இலங்கைக்கு சர்வதேச நிதியுதவி தாராளமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


0 comment(s) to... “மனித உரிமை மீறல் புகார்: இலங்கையை ஆதரித்து இந்தியா ஓட்டு; ஐ.நா. விசாரணை இல்லை”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails