ராணுவத் தாக்குதலால் 2,50,000 தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: செஞ்சிலுவைச் சங்கம்

Posted PM 12:10 by S R E E in லேபிள்கள்:
கொழும்பு: வடக்கு இலங்கையில் ராணுவம் நடத்திய பயங்கரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பலியாகியுள்ளனர். இரண்டரை லட்சம் தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பெருமளவிலான அப்பாவிகளை ராணுவம் குறி வைத்து தாக்குவது உறுதியாகியிருக்கிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியாவுக்கான நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜேக்கஸ் டி மயோ இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவித் தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு

தொடர்ந்து ராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதலால் அப்பாவிகள் பாதிப்படைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தாக்குதல் நடந்து வரும் பகுதியில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். உதவிப் பணியாளர்களும் இதில் காயமடைந்துள்ளனர்.

அந்தப் பகுதிகளுக்கு எங்களால் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் காயமடைந்தவர்களை மீட்கவும், மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்புகளும் இல்லாமல் போயுள்ளன.

தாக்குதலில் சிக்கி அவதிக்குள்ளாகியிருக்கும் மக்களுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைக்காமல் அவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

இரண்டரை லட்சம் பேருக்கு ஆபத்து

250 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். தொடர்ந்து நாலாபுறமும் இலங்கைப் படைகள் தாக்குதல் நடத்துவதால் அவர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எங்கும் போக முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். தப்பி ஓடவும் முடியாத நிலை.

வன்னி போர் முனையி்ல முடிந்த அளவுக்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட விரும்புகிறோம். ஆனால் இரு தரப்பும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அப்பாவிகள் வெளியேற வாய்ப்பு தர வேண்டும் என்றார்.

உணவும் கிடைக்காத அவலம்

இதற்கிடையே கொழும்பில் உள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் கூறுகையில், ஜனவரி 16ம் தேதி முதல் போர் நடந்து வரும் பகுதிகளுக்கு உணவு சப்ளை முற்றிலும் நின்று போய் விட்டது. மருந்துகள், உணவுகள் பெரும் தட்டுப்பாட்டில் உள்ளன என்றார்.


0 comment(s) to... “ராணுவத் தாக்குதலால் 2,50,000 தமிழர்களின் உயிருக்கு ஆபத்து: செஞ்சிலுவைச் சங்கம்”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails